சடை பின்னுவதும், பொன் நகைகள் அணிவதும், உடை மாற்றுவதுமாகிய வெளி அலங்கரிப்பில் உங்கள் அழகு அமையாமல், சாந்தமும் அமைதியுமுள்ள மனப்பான்மையாகிய அழியாத அலங்கரிப்பில் அமையட்டும். அந்த அலங்கரிப்போ மனித உள்ளத்தில் மறைவாயிருப்பதொன்று. அதுவே கடவுள் முன்னிலையில் விலை உயர்ந்தது.
ஆதலால், கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டு அவரால் அன்பு செய்யப்பட்ட இறைமக்கள் நீங்கள். இரங்கும் உள்ளம், பரிவு, தாழ்ச்சி, சாந்தம், பொறுமை ஆகிய பண்புகளை அணிந்து கொள்ளுங்கள்.
உங்களுள் ஞானமும் அறிவும் படைத்தவன் யாராவது இருந்தால், அவன் அவற்றைத் தனது நன்னடத்தையினால் எண்பிக்கட்டும்; அவன் செயல்கள் ஞானத்தால் விளையும் சாந்தத்தோடு விளங்கட்டும்.
நமது திருப் பெயரைக் கொண்டிருக்கும் நம் மக்கள் தங்களையே தாழ்த்தி, நமது திருமுன் வந்து தங்கள் தீய வழிகளை விட்டு விலகித் தவம் புரிந்து மன்றாடினால், நாம் விண்ணிலிருந்து அவர்களது விண்ணப்பத்தைக் கேட்டருள்வோம்; அவர்களது பாவத்தை மன்னித்து, அவர்களது நாட்டை நலன்களால் நிரப்புவோம்.
உங்கள்மேல் என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன். உங்கள் ஆன்மாவிற்கு இளைப்பாற்றி கிடைக்கும். ஆம், என் நுகம் இனிது, என் சுமை எளிது."
அப்போது அவர் அமர்ந்து பன்னிருவரையும் அழைத்து, "ஒருவன் முதல்வனாய் இருக்க விரும்பினால் அவன் அனைவரிலும் கடையனாய் இருக்கட்டும், அனைவருக்கும் பணியாளன் ஆகட்டும்" என்றார்.
உலகம் பொருட்படுத்துவதை ஒழித்து விட, உலகம் பொருட்படுத்தாததையும் தாழ்ந்ததெனக் கருதுவதையும், இகழ்ச்சிக்குரியதையும் கடவுள் தேர்ந்து கொண்டார். எந்த மனிதனும் கடவுள் முன் பெருமை பாராட்டாதபடி இவ்வாறு செய்தார்.
எனவே, நீ பிச்சையிடும்பொழுது, மக்கள் புகழ வேண்டுமென்று வெளிவேடக்காரர் செபக்கூடங்களிலும் தெருக்களிலும் செய்வதுபோல், உனக்குமுன் பறைசாற்றச் செய்யாதே. அவர்கள் தங்கள் கைம்மாறு பெற்றுவிட்டனர் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மனிதா, நல்லது எது என உனக்கு அவர் காட்டியிருக்கிறாரே! நீதியோடு நடத்தல், அன்பு கூர்தல், உன் கடவுள் முன்னிலையில் தாழ்ச்சியோடிருத்தல், இவையன்றி வேறெதை ஆண்டவர் உன்னிடம் கேட்கிறார்?
மனைவியரே, உங்கள் கணவருக்கு பணிந்து நடங்கள். இதுவே ஆண்டவருக்குள் வாழும் முறை. கணவர்களே, உங்கள் மனைவியர்க்கு அன்பு காட்டுங்கள், அவர்கள் மேல் எரிந்து விழாதீர்கள்.
நீங்களோ, சகோதரர்களே, உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; அந்த உரிமை, ஊனியல்பின் இச்சைகளுக்கு ஏற்ற வாய்ப்பாகும்படி விட்டுவிடாதீர்கள். மாறாக ஒருவருக்கொருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள்.
அவர்களை நோக்கி, "என் பெயரால் இக்குழந்தையை ஏற்றுக்கொள்பவன் எவனும் என்னையே ஏற்றுக்கொள்ளுகிறான். என்னை ஏற்றுக்கொள்பவன் எவனும் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்ளுகிறான். உங்கள் அனைவருள் சிறியவன் எவனோ, அவனே பெரியவன்" என்றார்.