நீங்கள் எந்த வேலை செய்தாலும் மனிதருக்காகச் செய்வதுபோல் செய்யாமல், ஆண்டவருக்காகவே செய்வதுபோல நெஞ்சாரச் செய்யுங்கள். அதற்குக் கைம்மாறாக ஆண்டவர் உங்களைத் தம் வாரிசுகளாக்குவார் என உங்களுக்குத் தெரியுமன்றோ? நீங்கள் ஊழியம் செய்யவேண்டியது ஆண்டவராகிய கிறிஸ்துவுக்கே.
ஆகையால், என் அன்பார்ந்த சகோதரர்களே, உறுதியாய் இருங்கள், நிலை பெயராதீர்கள். உங்கள் உழைப்பு ஆண்டவருக்குள் வீணாவதில்லை என்பதை அறிந்து, ஆண்டவரின் வேலையைச் செய்வதில் சிறந்து விளங்குங்கள்.
இரக்கமும் உண்மையும் உன்னை விட்டு அகலாதிருக்கட்டும். அவற்றை உன் கழுத்துக்கு (ஆரமாய்ச்) சூடுவாய்; உன் இதயத்தில் அவற்றைப் பதிய வைப்பாய். அப்போது நீ கடவுளுக்கும் மனிதனுக்கும் முன்பாக அருளையும் நல்லறிவையும் கண்டடைவாய்.
சோதனைகளை மனவுறுதியோடு தாங்குபவன் பேறுபெற்றவன். இதனால் அவனது தகைமை எண்பிக்கப்படும்; இறைவன் தம்மீது அன்பு செலுத்துவோர்க்கு வாக்களித்த வாழ்வை அவன் வெற்றி வாகையாகப் பெறுவான்.
நாங்கள் அறிவிப்பதோ மறைநூலில் எழுதியுள்ளவாறு, ' கண்ணுக்குப் புலப்படாதது, காதுக்கு எட்டாதது, மனித உள்ளத்தில் எழாதது. கடவுள் தமக்கு அன்பு செய்கிறவர்களுக்காக ஏற்பாடு செய்தது'.
ஆனால், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கற்பித்த வழியிலேயே நடங்கள். அப்போது வாழ்வீர்கள். அது உங்களுக்கு நன்மையும் பயக்கும். நீங்கள் உரிமைகொள்ளும் நாட்டிலே உங்கள் நாட்களும் நீடித்திருக்கும்.
எனவே, நீ பிச்சையிடும்பொழுது, மக்கள் புகழ வேண்டுமென்று வெளிவேடக்காரர் செபக்கூடங்களிலும் தெருக்களிலும் செய்வதுபோல், உனக்குமுன் பறைசாற்றச் செய்யாதே. அவர்கள் தங்கள் கைம்மாறு பெற்றுவிட்டனர் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
விசுவாசத்தினாலன்றி ஒருவனும் கடவுளுக்கு உகந்தவனாயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்கிறவன் அவர் இருக்கிறார் என்றும், தம்மைத் தேடுபவர்களுக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறாரென்றும் விசுவசிக்க வேண்டும்.
ஆயினும், உன் கடவுளாகிய ஆண்டவரை நீ அங்கே தேடுவாய். அவரை உன் முழு இதயத்தோடும் வருத்தம் நிறைந்த ஆன்மாவோடும் விரும்பித் தேடுவாயானால், அவர் உனக்கு அகப்படுவார்.
கடந்ததை மறந்துவிட்டு முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு பரிசுபெற வேண்டி இலக்கை நோக்கி முனைந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவுக்குள் என்னைக் கடவுள் மேலுலகுக்கு அழைப்பதே அப்பரிசாகும்.
நீயோ செபம் செய்யும்பொழுது, உன் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டு, மறைவாயுள்ள உன் தந்தையை நோக்கிச் செபம் செய். மறைவாயுள்ளதைக் காணும் உன் தந்தையும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார்.
தீமையைத் தேடாதீர்கள்; நன்மையையே நாடுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வீர்கள்; அப்பொழுது நீங்கள் சொல்வது போலவே, சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடிருப்பார்.