1. அப்போது ஒருவரையொருவர் மிதித்துக்கொண்டு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்கையில், அவர் தம் சீடருக்குக் கூறியதாவது: "பரிசேயரின் வெளிவேடமாகிய புளிப்பு மாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
2. வெளிப்படாதபடி மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாதபடி ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை.
3. ஆதலின், நீங்கள் இருளில் கூறியதெல்லாம் ஒளியில் கேட்கப்படும். அறைகளில் காதோடு காதாய்ப் பேசியது கூரைமீதிருந்து அறிவிக்கப்படும்.
4. " என் நண்பர்களாகிய உங்களுக்குச் சொல்லுகிறேன்: உடலைக் கொன்றபின் அதற்குமேல் ஒன்றும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்சாதீர்கள்.
5. யாருக்கு அஞ்சவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிப்பேன். கொன்றபின் நரகத்தில் வீழ்த்தவும் வல்லவருக்கு அஞ்சுங்கள். ஆம், அவருக்கே அஞ்சுங்கள் என உங்களுக்குச் சொல்லுகிறேன்.
6. இரண்டு காசுக்கு ஐந்து குருவிகள் விற்பதில்லையா? அவற்றில் ஒன்றும் கடவுள் முன்னிலையில் மறக்கப்படுவதில்லையே! 7 ஆம், உங்கள் தலைமயிரெல்லாம் எண்ணப்பட்டுள்ளது. அஞ்சாதீர்கள். ஏனெனில், குருவிகள் பலவற்றிலும் நீங்கள் மேலானவர்கள்.
8. " நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனிதர்முன் என்னை வெளிப்படையாக ஏற்றுக்கொள்பவன் எவனோ, அவனை மனுமகனும் கடவுளின் தூதர்கள்முன் வெளிப்படையாக ஏற்றுக்கொள்வார்.
9. மனிதர்முன் என்னை மறுதலிக்கிறவனோ கடவுளின் தூதர்முன் மறுதலிக்கப்படுவான்.
10. " மனுமகனுக்கு எதிராய்ப் பேசுகிறவன் எவனும் மன்னிப்புப்பெறுவான் ஆனால், பரிசுத்த ஆவியைப் பழிப்பவனோ மன்னிப்புப்பெற்றான்.
11. "செபக்கூடங்களுக்கும், ஆள்வோர்முன்னும் அதிகாரிகள்முன்னும், உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது, எப்படிப் பதில் சொல்வது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என்று கவலைப்பட வேண்டாம்.
12. ஏனெனில், அவ்வேளையில் என்ன சொல்ல வேண்டுமென்று பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் கற்பிப்பார்."
13. அப்போது, கூட்டத்தில் ஒருவன், "போதகரே, என் சகோதரன் என்னுடன் சொத்தைப் பங்கிட்டுக்கொள்ளுமாறு சொல்லும்" என்றான்.
14. அதற்கு அவர், "அன்பனே, நியாயம் தீர்க்கவோ பாகம்பிரிக்கவோ என்னை ஏற்படுத்தியவர் யார்?" என்றார்.
15. பின் மக்களைப் பார்த்து, "எவ்வகைப் பொருளாசையும் கொள்ளாதபடி கவனமாயிருங்கள். ஏனெனில், ஒருவனுக்கு எவ்வளவு தானிருந்தாலும் செல்வப்பெருக்கினால் வாழ்வு. வந்துவிடாது" என்றார்.
16. பின்னர், அவர்களுக்கு இவ்வுவமையைச் சொன்னார்: "பணக்காரன் ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.
17. அவன், 'விளைபொருளைச் சேர்த்து வைக்க இடமில்லையே, என்ன செய்வது' என்று தனக்குள் எண்ணி,
18. 'சரி, என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன். அங்கு என் உடைமை, கோதுமை எல்லாம் சேர்த்துவைத்து:
19. நெஞ்சே, பல்லாண்டுகளுக்கு வேண்டிய பொருள் உனக்கு ஏராளமாய் உள்ளது. இளைப்பாறு; உண்டு குடித்து, விருந்தாடு என்று சொல்லிக்கொள்வேன்' என்றான்.
20. ஆனால் கடவுள், 'அறிவிலியே, இன்றிரவே உன் உயிரைவாங்கப் போகிறார்கள். நீ தேடி வைத்தது யாருக்குக் கிடைக்குமோ?' என்றார்.
21. கடவுள் முன் செல்வம் இல்லாதவனாய், தனக்காகவே செல்வந்திரட்டுகிறவன் இவ்வாறே இருக்கிறான்."
22. பின்னர், அவர் தம் சீடருக்குக் கூறியதாவது: "ஆதலால் உங்களுக்குச் சொல்லுகிறேன்: உயிர் வாழ எதை உண்பதென்றோ, உடலை மூட எதை உடுப்பதென்றோ கவலைப்பட வேண்டாம்.
23. ஏனெனில், உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தவை.
24. காக்கைகளைக் கவனியுங்கள். அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை. அவற்றிற்குக் குதிருமில்லை, களஞ்சியமுமில்லை. கடவுளே அவற்றிற்கு உணவளிக்கிறார். பறவைகளைவிட நீங்கள் எவ்வளவோ மேலானவர்கள்.
25. கவலைப்படுவதால் உங்களில் எவன் தன் வளர்த்திக்கு ஒரு முழம் கூட்டமுடியும் ?
26. ஆதலால், மிகவும், சின்னஞ்சிறிய செயலையும் செய்ய இயலாத நீங்கள் மற்றவைபற்றிக் கவலை கொள்வானேன்?
27. காட்டுமலர்கள் எப்படி வளர்கின்றன என்று கவனியுங்கள். அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை. ஆயினும் சாலொமோன்கூடத் தம் மாட்சியிலெல்லாம் இவற்றுள் ஒன்ரறப்போல் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
28. குறைவான விசுவாசம் உள்ளவர்களே, வயலில் இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் புல்லைக் கடவுள் இவ்வாறு உடுத்துவாரானால், உங்களுக்கு எவ்வளவுதான் செய்யமாட்டார்?
29. எதை உண்பது, எதைக் குடிப்பது என்ற நினைவாக இருக்க வேண்டாம். அவற்றை ஏக்கத்தோடு தேட வேண்டாம்.
30. ஏனெனில், உலகத்தில் புறவினத்தார்தாம் இவையெல்லாம் தேடியலைவர். இவை உங்களுக்குத் தேவை என்று உங்கள் தந்தைக்குத் தெரியும்.
31. கடவுளின் அரசையே முதலில் தேடுங்கள். இவை அனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக்கொடுக்கப்படும்.
32. "சிறு மந்தையே, அஞ்சாதே; ஏனெனில், உங்கள் தந்தை தம் அரசை உங்களுக்குக் கொடுக்கத் திருவுளம் கொண்டார்.
33. "உங்கள் உடைமைகளை விற்றுப் பிச்சையிடுங்கள். இற்றுப்போகாத பணப்பைகளையும், வானகத்தில் குறையாத செல்வத்தையும் தேடிக்கொள்ளுங்கள். அங்கே திருடன் அண்டுவதில்லை, பூச்சி அரிப்பதுமில்லை.
34. உங்கள் செல்வம் எங்குள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
35. "இடுப்பில் வரிந்துகட்டியிருங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும்.
36. திருமணவிருந்துக்குப் போன தம் தலைவன், எப்பொழுது வருவானோ என்று காத்திருக்கிறவர்களைப்போல, நீங்களும் இருங்கள். அவன் வந்து தட்டியவுடனே திறக்க வேண்டுமென்றோ?
37. எவ்வூழியர் விழித்திருக்கக் காண்பானோ, அவ்வூழியர் பேறுபெற்றவர். உறுதியாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: அவன் இடுப்பில் வரிந்துகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிலமர்த்தி, ஒவ்வொருவனையும் அணுகி அவர்களுக்குப் பணிவிடை புரிவான்.
38. அவன் இரண்டாம் சாமத்தில் வந்தாலும், மூன்றாம் சாமத்தில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருக்கக் கண்டால், அவ்வூழியர்கள் பேறுபெற்றவர்கள்.
39. திருடன் இன்ன சாமத்தில் வருவான் என்று வீட்டுத்தலைவனுக்குத் தெரிந்தால், வீட்டில் கன்னம்வைக்க விடமாட்டானன்றோ?
40. இதையுணர்ந்து நீங்களும் ஆயத்தமாக இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்."
41. இதைக்கேட்ட இராயப்பர், "ஆண்டவரே, இவ்வுவமை எங்களுக்கு மட்டுமா? எல்லாருக்குமா?" என்று வினவினார்.
42. ஆண்டவர் கூறியதாவது: "தக்க காலத்தில் தன் வேலையாட்களுக்குப் படியளக்க, தலைவன் ஏற்படுத்திய நம்பிக்கையும் விவேகமும் உள்ள கண்கானிப்பாளன் யார் ?
43. எந்த ஊழியன் அவ்வாறு செய்துகொண்டிருப்பதைத் தலைவன் வந்து காண்பானோ அவன் பேறுபெற்றவன்.
44. அவனைத் தன்னுடைமைக்கெல்லாம் அதிகாரியாக ஏற்படுத்துவான் என உங்களுக்கு உறுதியாகச் சொல்லுகிறேன்.
45. ஆனால், 'என் தலைவர் வரக் காலந்தாழ்த்துகிறார்' என்று அவ்வூழியன் தனக்குள் சொல்லிக்கொண்டு, வேலைக்காரர் வேலைக்காரிகளை அடித்து, மயக்கமுற உண்டு குடிக்கத் தொடங்கினால்,
46. அவ்வூழியன் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் தலைவன் வந்து அவனை நீக்கிவிட்டு, விசுவாசமற்றவர் கதிக்கு அவனை உள்ளாக்குவான்.
47. "தன் தலைவனின் விருப்பத்தை அறிந்திருந்தும், முன்னேற்பாடு செய்யாமலும், அவனது விருப்பத்தின்படி நடவாமலும், இருந்த ஊழியன் நன்றாய் அடிபடுவான்.
48. அவன் விருப்பத்தை அறியாமல் தண்டனைக் குரியவற்றைச் செய்பவனோ கொஞ்சம் அடிபடுவான். எவனுக்கு அதிகம் அளிக்கப்பட்டதோ அவனிடம் அதிகம் எதிர்பார்க்கப்படும். எவனிடம் அதிகம் ஒப்படைத்தார்களோ அவனிடம் இன்னும் அதிகமாய்க் கேட்பார்கள்.
49. " மண்ணுலகில் தீயை மூட்டவே வந்தேன். இப்போதே அது பற்றியெரிய வேண்டுமென்று எவ்வளவோ விரும்புகிறேன்! 50 நான் பெற வேண்டிய ஞானஸ்நானம் ஒன்று உண்டு. அது நிறைவேறுமளவும் நான் எவ்வளவோ ஏக்கமாயிருக்கிறேன்.
51. நான் மண்ணுலகிற்குச் சமாதானத்தை அளிக்க வந்தேனென்றா எண்ணுகிறீர்கள்? இல்லை, பிரிவினை உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்லுகிறேன்.
52. இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் மூவர் இருவருக்கு எதிராகவும், இருவர் மூவருக்கு எதிராகவும் பிரிந்திருப்பர்.
53. தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும், மருமகள் மாமிக்கும் எதிராகப் பிரிக்கப்படுவர்."
54. அவர் கூட்டத்தை நோக்கி, "மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழை வரும் என்கிறீர்கள். அப்படியே நடக்கிறது.
55. தெற்கிலிருந்து காற்று அடிப்பதைப் பார்க்கும்பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள். அதுவும் அப்படியே நடக்கிறது.
56. வெளிவேடக்காரரே, வானின் தோற்றத்தையும் பூமியின் தோற்றத்தையும் உய்த்துணர நீங்கள் அறிந்திருந்தும், இக்காலத்தை நீங்கள் உய்த்துணராமல் இருப்பது எப்படி?
57. "எது நீதியானதென்று நீங்களாகவே ஏன் தீர்மானிக்க முடியாது ?
58. நீ உன் எதிரியோடு அதிகாரியிடம் செல்லும்போது, வழியிலேயே வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சிசெய். இல்லையேல், அவன் உன்னை நீதிபதியிடம் இழுத்துக்கொண்டு போக, நீதிபதி உன்னைச் சேவகனிடம் கையளிக்கக்கூடும். சேவகன் உன்னைச் சிறையில் அடைக்க நேரிடும்.
59. கடைசிக் காசைத் திருப்பிக் கொடுக்குமளவும், அங்கிருந்து நீ வெளியேறமாட்டாய் என உனக்குச் சொல்லுகிறேன்" என்றார்.

பரிசுத்த வேதாகமம் 1973

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save